உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தங்களைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் தற்போதைய பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவின் விசாரணை நிறைவடைந்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் குறைபாடுகள் காணப்பட்டதாகக் கூறி, தங்களைச் சட்டவிரோதமான முறையில் கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து இவர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களைக் கைது செய்வதைத் தடுத்து முன்னதாக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றையும் பிறப்பித்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதியரசர்கள் குழாம், மனு தொடர்பான விசாரணைகளை இன்றுடன் (28) நிறைவு செய்வதாக அறிவித்தது.
இந்த மனு மீதான இறுதித் தீர்ப்பை அறிவிப்பதற்கான திகதியைக் குறிப்பிடாமல், தீர்ப்பு வழங்குவதை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த விசாரணையில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.












