நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் அநேகமான மே தினப் பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இலங்கை பொலிஸார் கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கையையும் அமுல்படுத்தவுள்ளனர்.
பொலிஸாரின் தகவல்படி, பிரதான பேரணிகள், அணிவகுப்புகள் மற்றும் கொண்டாட்டங்கள் கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறும் அதேவேளையில், நாட்டின் பல பிற பகுதிகளிலும் பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த மே தின நிகழ்வுகளின் போது அமைதியான சூழலை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு, சாலைப் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வாகனப் போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதையும் பராமரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்புக்கு வெளியே நடைபெறும் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.













