ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை அன்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியானது 11 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் நடப்பு இந்தியன் பிரீமியல் லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
தொடக்க துடுப்பாட்ட வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் வலுவான துடுப்பாட்டத்துடனும், ஹென்ரிச் கிளாசென் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 235 ஓட்டங்கள் எடுத்தது.
ஹென்ரிச் கிளாசென் 43 பந்துகளில் 69 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 32 பந்துகளில் 55 ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகபடியாக எடுத்தனர்.
பின்னர் கடினமான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
ஏமாற்றமளித்த பவர்பிளே ஆட்டத்திற்குப் பின்னர் இன்னிங்ஸில் ஒருபோதும் முன்னிலை பெறாத பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, கூப்பர் கொன்னலியின் (59 பந்துகளில் 107 ஆட்டமிழக்காத ஓட்டம்) சதம் மட்டுமே ஆறுதலாக இருந்தது.
இதன்மூலம், ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி தொடர்ச்சியாக ஒன்பதாவது தோல்வியைச் சந்தித்தது.
அதேநேரம், இந்த ஏழாவது வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளைப் பெற்று, 10 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
மீதமுள்ள மூன்று போட்டிகளில் இன்னும் ஒரு வெற்றி பெற்றால், பிளே-ஆஃப் இடத்தை உறுதி செய்வதற்குப் போதுமானதாக புள்ளிகளை அவர்கள் பெறுவார்கள்.













