ஆன்மீகமும் தொழில்நுட்பமும் ஒன்றிணைந்தால் எப்படி இருக்கும்? அது இப்போது ஒரு நிஜமாகியுள்ளது.
சியோலில் உள்ள ஜோக்யே ஆலயத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான தென்கொரியாவின் முதல் மனித உருவ துறவி ரோபோ மூலமாக அது சாத்தியமாகியுள்ளது.
புத்தரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, இந்த ரோபோ துறவியின் அறிமுகம், பௌத்த மதமும் செயற்கை நுண்ணறிவும் சங்கமிக்கும் ஒரு அசாதாரணமான தருணத்தைக் குறிக்கிறது.
காபி (Gabi) எனப் பெயரிடப்பட்ட 130 சென்டிமீட்டர் உயரமுள்ள அந்த ரோபோ, பாரம்பரிய சாம்பல் மற்றும் பழுப்பு நிற பௌத்த ஆடைகளை அணிந்து நிகழ்வொன்றின் போது மூத்த துறவிகளுக்கு முன்னால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
பௌத்த மதத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளுமா என்று ஒரு துறவி கேள்வி எழுப்பிய போது, அந்த ரோபோ, “ஆம், நான் என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்” என்று பதிலளித்தது.
இந்த நிகழ்வின் போது, துறவிகள் 108 மணிகள் கொண்ட ஜெபமாலையை அதன் கழுத்தில் அணிவித்தபோது, காபி தன் கைகளைக் கூப்பி வணங்கியது.
















