கனடாவின் புரோக்வில் (Brockville) பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய மும்முனை கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தாய் மற்றும் இரு மகள்களின் அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள புரோக்வில் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 49 வயதுடைய லுவாண்டா எலியட் (Louwanda Elliott) மற்றும் அவரது மகள்களான 17 வயதுடைய மக்காய்லா எலியட் (Mackayla Elliott), 15 வயதுடைய நிகிதா எலியட் (Nikita Elliott) ஆகிய மூவருமே கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 17 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் மீது மூன்று முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த சிறுவன் கொல்லப்பட்ட சிறுமிகளில் ஒருவருடன் காதலில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் சிறுவன் என்பதால், கனடிய சட்டப்படி அவனது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட போது, அவன் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் கார்டியர் கோர்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன.
தாக்குதலுக்குக் கத்தி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் ஒரு “பெண் கொலை” (Femicide) என பொலிஸ் ஆய்வாளர் டெரில் போய்ட் விவரித்துள்ளார்.
புரோக்வில் நகரின் வரலாற்றிலேயே இவ்வாறானதொரு மும்முனை கொலைச் சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை என பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் நூனன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், மே மாதம் 6 ஆம் திகதி இரவு முதல் 7 ஆம் திகதி மதியம் வரையான காலப்பகுதியில் நகரின் வடமேற்குப் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் அல்லது வாகன கெமரா பதிவுகள் (Dashcam) ஏதேனும் இருப்பின் அதனைத் தமக்கு வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















