நீதிமன்ற அறைக்குள் அரங்கேறிய ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அதிர்ச்சியூட்டும் கறுப்புப் பணப் பரிமாற்ற விபரங்கள் வௌியாகியுள்ளன.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைக்குத் துப்பாக்கி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஓஸ்மண்ட் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, பாரிய நிதி மோசடி மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்ற விபரங்கள் வௌிச்சத்திற்கு வந்துள்ளன.
மறைந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணத்தை (Black Money), இலங்கைக்குள் இருந்து முழுமையாக வெள்ளையாக்கும் (Money Laundering) பிரதான சட்டவிரோத நடவடிக்கைகளை இந்த ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரே முன்னெடுத்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் அதிரடியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், கம்பஹா ஒஸ்மண்ட் கடந்த 13ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டார். கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் 02 மெகசின்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை முதலில் 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து முதற்கட்ட விசாரணைகளை நடத்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அந்தக் காலப்பகுதி நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய பாதாள உலகத் தொடர்புகளைக் கண்டறிவதற்காக, சந்தேகநபரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து தீவிர விசாரணை செய்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் (16) உத்தியோகபூர்வமாக அனுமதி பெற்றுள்ளனர்.
நீதிமன்றக் கொலைக்கு ஆயுதம் வழங்கிய வழக்கிலிருந்து, தற்போது பாரிய கறுப்புப் பணப் பரிமாற்ற வலைப்பின்னல் வரை இந்த விசாரணை விரிவடைந்துள்ளமை இலங்கை பாதுகாப்புப் பிரிவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















