கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா (Ebola) நோய்ப் பரவலை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.
கொங்கோவின் கிழக்கு இடுரி மாகாணத்தில், சுமார் 246 சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளும் 80 இறப்புகளும் பதிவாகியுள்ள நிலையில், இந்த நோய்ப் பரவல் ஒரு பெருந்தொற்று அவசரநிலைக்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்று WHO கூறியது.
ஆனால், தற்போது கண்டறியப்பட்டு அறிவிக்கப்படுவதை விட இது மிகப் பெரிய நோய்ப் பரவலாக இருக்கக்கூடும் என்றும், உள்ளூர் மற்றும் பிராந்திய அளவில் பரவுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயம் உள்ளது என்றும் WHO எச்சரித்தது.
தற்போதைய எபோலா திரிபு, புண்டிபுக்யோ (Bundibugyo) வைரஸால் ஏற்படுகிறது என்றும், அதற்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ இல்லை என்றும் WHO தெரிவித்துள்ளது.
இதன் ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், தசை வலி, சோர்வு, தலைவலி மற்றும் தொண்டை வலி ஆகியவை காணப்படும். அதனைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு, தோலில் தடிப்பு மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும்.
கொங்கோவின் இட்டூரி மாகாணத்தின் தலைநகரான புனியா மற்றும் தங்கச் சுரங்க நகரங்களான மோங்வாலு, ருவாம்பாரா உள்ளிட்ட மூன்று சுகாதார வலயங்களில் தற்போது எட்டு பேருக்கு ஆய்வகத்தில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சந்தேகிக்கப்படும் தொற்றுகள் மற்றும் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது.


















