போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்ட டபிள்யூ. எஸ். சத்தியானந்த என்பவரை அவமானப்படுத்தி, அவரது அடிப்படை மனித உரிமைகளை அந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மேலதிக செயலாளர் டபிள்யூ. எஸ். சத்தியானந்த தாக்கல் செய்த அடிப்படை உரிமை (FR) மனுவை விசாரித்ததன் பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
30 வருட கால நீண்ட அரச நிர்வாக சேவை (SLAS) அனுபவம் கொண்ட மனுதாரர் சத்தியானந்த, அரச நிர்வாக அமைச்சினால் கடந்த 2024 டிசம்பர் 18 அன்று போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அன்றைய தினமே அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
எனினும், அன்று நண்பகல் 12.30 மணியளவில் அவரது அறைக்கு வந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, “உமது சேவை எனக்குத் தேவையில்லை” எனக் கூறி அவரை அலுவலகத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பணித்துள்ளார்.
ஒரு உயர் அரச அதிகாரிக்கே உரித்தற்ற வகையில் அமைந்த இந்த தன்னிச்சையான நடவடிக்கையால், தான் கடும் அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானதாக மனுதாரர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, ஏனைய நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரின் உடன்பாட்டுடன் தீர்ப்பை அறிவித்தார்.
இதன்போது நீதிபதி அமைச்சின் செயலாளருக்கு மேற்பார்வை அதிகாரங்கள் மட்டுமே உள்ளன, அதை விடுத்து அரச அதிகாரிகளை நியமிப்பதிலோ அல்லது இடமாற்றம் செய்வதிலோ அரச சேவை ஆணைக்குழுவின் அதிகாரங்களை தம்கைக்குள் எடுக்க முயல்வது தீவிரமான குற்றமாகும். அரச அதிகாரிகள் மக்களின் பாதுகாவலர்கள் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதனடிப்படையில், மனுதாரரின் கௌரவத்திற்குப் பங்கம் விளைவித்ததன் மூலம், இலங்கை அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ‘சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படும்’ அடிப்படை உரிமையை அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மீறியுள்ளார் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எவ்வாறாயினும், ஒரு அரச அதிகாரிக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பை வெறும் பணத்தால் ஈடுசெய்ய முடியாது என்பதால், நட்டஈடு அல்லது வழக்குச் செலவுகள் குறித்து எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














