ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்து, லெபனான் முழுவதும் தொடர் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானின் கிழக்குப் பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
பதிலடியாக 22 ஆளில்லா விமான மற்றும் ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதன் இலக்குகளில் இஸ்ரேலிய வீரர்கள், டாங்கிகள், படைமுகாம்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவை அடங்கியிருந்ததாகவும் ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் லெபனானும் இஸ்ரேலும் 45 நாள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்ட போதிலும், சில இடங்களில் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முறையான தூதரக உறவுகள் இல்லாத லெபனான் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள், அடுத்த வாரம் வொஷிங்டனில் மேலும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏப்ரல் 16 அன்று போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து, இஸ்ரேலியத் தாக்குதல்கள் பெரும்பாலும் நாட்டின் தெற்குப் பகுதிக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு இஸ்ரேலியப் படைகள் தங்கியுள்ளன, மேலும் அங்கிருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
திங்கட்கிழமை மாலை தாக்கப்பட்ட பெக்கா பள்ளத்தாக்கு, கிழக்கு லெபனானில் சிரியாவுடனான எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
பிராந்தியப் போரின் அனைத்து முனைகளிலும் முழுமையான போர்நிறுத்தத்தை உள்ளடக்கியதாக அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் அமைய வேண்டும் என்று ஈரான் அரசாங்கம் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை விரிவடைந்துள்ளது.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, லெபனான் தற்போதைய சண்டைச் சுற்றில் இழுக்கப்பட்டது.
ஈரானின் கூட்டாளியான ஹிஸ்புல்லா, ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்ற இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியது.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் லெபனான் முழுவதும் வான்வழித் தாக்குதல்களையும் தரைவழிப் படையெடுப்புகளையும் நடத்தியது.
லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி, இஸ்ரேலியத் தாக்குதல்களில் 3,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
லெபனான் அரசாங்கம் ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, ஆனால் இது ஒரு சிக்கலான பணி என்று கூறி, அதை நிறைவு செய்வதற்கு போர் நிறுத்தம் அவசியம் என்று அது வலியுறுத்துகிறது.















