ஈரானுடனான இராணுவ மற்றும் அணுசக்தி மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட தற்காலிக உடன்படிக்கையில், தற்போதைக்குக் கையெழுத்திடத் தான் இன்னும் தயாராக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது சமூக வலைத்தளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், இந்த விவகாரத்தில் ஒரு “இறுதி முடிவை எடுப்பதற்காக” வெள்ளை மாளிகையில் தனது உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்காக, சர்வதேசப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே தற்காலிக உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்தது.
எனினும், அந்த உடன்பாடு தனக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை என்பதை ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இறுதி ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா கையெழுத்திட வேண்டுமாயின், ஈரான் பின்வரும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, ஈரான் தனது நாட்டில் ஒருபோதும் அணு ஆயுதங்களையோ அல்லது அணு குண்டுகளையோ (Nuclear Weapons) தயாரிக்கவோ, வைத்திருக்கவோ மாட்டோம் என்று சர்வதேச சமூகத்திற்கு உறுதியான வாக்குறுதி அளிக்க வேண்டும்.
சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்கு எவ்விதமான மறைமுக வரிகளோ, கட்டணங்களோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்காமல், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாக முழுமையாகத் திறக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த திடீர் நிபந்தனைகள் மற்றும் பிடிவாதப் போக்கு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்படவிருந்த தற்காலிகப் போர்நிறுத்தம் மற்றும் சமாதான முயற்சிகளில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















