அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்காக 70 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், ஏனைய சர்ச்சைக்குரிய கொள்கை முன்மொழிவுகள் தொடர்பாக குடியரசுக் கட்சியினரிடையே நிலவும் உள்விவகார முரண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையிலான பல திருத்தச்சட்டங்கள் மீதான நீண்ட நாள் வாக்கெடுப்புக்குப் பின்னரே இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது.
குடியேற்ற அமுலாக்கத்தின் எதிர்காலம் குறித்து பல மாதங்களாக நீடித்த கசப்பான போராட்டத்துக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் தலைவரான ட்ரம்புக்கு அவரது முக்கிய கொள்கை சார்ந்த விவகாரத்தில் இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இதற்கான வாக்கெடுப்பின்போது ட்ரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள்ளேயே நிலவும் கடுமையான உள்முரண்பாடுகளும் அம்பலமாகியுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், குடிவரவுத் தடுப்பு நடவடிக்கைகளின் போது முகமூடி அணிதல் மற்றும் முக்கிய இடங்களில் திடீர் சோதனைகள் நடத்துவதற்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தற்காலிகமாக முடங்கியுள்ளது.
இதனால், ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பைத் தவிர்ப்பதற்காக, குடியரசுக் கட்சியினர் தங்களது பெரும்பான்மையைப் பயன்படுத்தி “பட்ஜெட் மறுசீரமைப்பு” என்ற விரைவு வழிமுறை ஊடாக இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.
செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, அடுத்த வாரம் பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டு, அங்கு நிறைவேற்றப்பட்ட பின்னர் ட்ரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது.
மேலும், ட்ரம்பின் திட்டமிடப்பட்ட வெள்ளை மாளிகை நடன அரங்கின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட 1 பில்லியன் டொலர் நிதியும் குடியரசுக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.இறுதி சட்டமூலத்தில் இது நீக்கப்பட்டாலும், வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில் இத்தகைய திட்டங்களை ஆதரிப்பது வரவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களில் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் அஞ்சுகின்றனர்.
















