சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார் நிலை குறித்து உர நிறுவனங்களுடனான கலந்துரையாடல், கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்றது.

உர இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பாக உர நிறுவனங்களின் தயார் நிலை குறித்து இதன்போது கேட்டறிந்த ஜனாதிபதியின் செயலாளர் அதற்காக அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராய்ந்தார்.
பெரும் போகத்திற்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி உரிய முறையில் உரங்களை வழங்குவதற்காக உர இறக்குமதி மற்றும் விநியோக செயல்முறைகளை கால அட்டவணையின்படி மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் பெரும் போகம் ஆரம்பமாகும் போது விவசாயிகளுக்கு உரிய முறையில் உரங்களை விநியோகித்தல் மற்றும் உர இறக்குமதியின் போது உலக சந்தையில் உர விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு உர இறக்குமதி செய்வதற்கான திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும் ஜூலை மாத ஆரம்பத்தில் அதன் முன்னேற்றத்தை ஆராய்வதற்கும் இங்கு அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.













