அமெரிக்காவின் ஜனாதிபதி அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தொடர் கொடூர பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) அதிரடியாக முறியடித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை வளாகத்தில் நடத்தவிருந்த தற்காப்புக் கலை போட்டித் தொடரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரர்கள், அதிநவீன வெடிபொருட்களை ஏற்றிய ட்ரோன்களைப் பயன்படுத்தி, தற்காப்புக் கலை போட்டிகளைக் காண வெள்ளை மாளிகைக்கு வருகை தரவிருந்த பெருந்திரளான பொதுமக்களை இலக்கு வைத்து கொடூரமான முறையில் வான்வழித் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் உடனடியாகக் களமிறங்கிய எஃப்.பி.ஐ மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினர், இக்கொடூரத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே அதனுடன் தொடர்புடைய 5 முக்கிய சந்தேகநபர்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்த அதே நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டமும் அமைந்திருந்தமையால் பாதுகாப்புப் பிரிவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச ஊடகங்களின் விபரங்களின்படி, இந்த ட்ரோன் தாக்குதலின் மூலம் பின்வரும் உலகப் புகழ்பெற்ற முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்வதே தாக்குதல்தாரர்களின் இறுதி இலக்காக இருந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , உலகின் முன்னணி தொழிலதிபர் இலோன் மஸ்க் ஆகியோர் இந்த தாக்குதல் திட்டத்தின் இலக்காக தெரிவிக்கப்படுகின்றனர்.
இருப்பினும், இந்த அதிமுக்கிய பிரமுகர்கள் யாரும் குறிப்பிட்ட அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், அதற்கு முன்பாகவே சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை மற்றும் வொஷிங்டன் நகரின் பாதுகாப்புப் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.














