யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே கடற்தொழில் அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் கடந்த 06 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள்
தொடர்பாக நோக்கினால், மீள் குடியேறிய மக்களுக்காக 827 வீடுகளும், வறுமை நிலையில் உள்ள ஏனைய மக்களுக்காக 281 வீடுகளும், சமுர்த்தி பயனாளிகளுக்காக 45 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 379 வீடுகளுக்கான திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 50 இலட்சம் ரூபாய்க்கு ஒரு வீடும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று விவசாய திட்டங்களுக்காக 06 திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
சுற்றுலா அபிவிருத்திக்காக 04 பாரிய திட்டங்களும், விளையாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்காக 05 திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று போக்குவரத்து அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கிராமிய வீதி புனரமைப்புக்கு ரூபா 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளடங்கலாக ரூபா 2500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக நெடுந்தீவிற்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை படகுகள் திருத்தம் செய்யப்பட்டு அவை கடல் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ளது.
அதேபோன்று சமூக சக்தியினால் பல திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதவும், அதில் 719 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு ரூபா 652 மில்லியனில் நடைமமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய உற்பத்தி திறன் செயற்பாடுகளுக்காக 17 திட்டங்களும், அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட உட்கட்டுமானங்களை மீட்டெடுப்பதற்காக 03 திட்டங்களுக்க்காக ரூபா 32 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிற்கு அப்பால் உலக வங்கி மற்றும் சர்வதேச வங்கிகளிடமிருந்து மேலும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுக்கு 125 மோட்டார் சைக்கிள்கள் வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதை பொருள் பாவணையானது கணிசமான அளவிற்கு குறைந்துள்ளது, அண்மையில் இலஞ்ச ஊழல் செயற்பாடுகளை ஒழிப்பதற்கான அலுவலகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என மேலும் தெரிவித்தார்.












