சட்டவிரோதமாக பிரான்ஸிலிருந்து சிறிய படகுகள் மூலம் பிரிட்டனை சென்றடைய முயலும் அகதிகள், மிக நீண்ட கடல் பயணங்களால் உடலின் வெப்பநிலை ஆபத்தான அளவிற்குக் குறையும் ‘ஹைபோதெர்மியா’ (Hypothermia) போன்ற உயிராபத்துக்களை எதிர்கொண்டு வருவதாகக் கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நடப்பு ஆண்டில் பிரிட்டனை அடைவதற்காக அகதிகள் பயன்படுத்தும் கடற்கரைப் பகுதியானது, பிரான்ஸின் டியெப் நகரில் இருந்து பெல்ஜியம் கடற்கரை வரை சுமார் 100 மைல்களுக்கு மேல் விரிவடைந்துள்ளது.
கடந்த வசந்த காலத்தில், மனிதக் கடத்தல்காரர்கள் தங்களது உத்திகளை மாற்றி, பெல்ஜியம் கடற்கரையோரங்களில் இருந்து அதிகளவிலான சிறிய படகுகளை இயக்கத் தொடங்கினர்.
இருப்பினும், கடந்த சில நாட்களாக இந்த நிலைமை மீண்டும் மாறியுள்ளது.
அகதிகள் பயணிக்கும் படகுகள் பிரான்ஸின் தெற்குப் பகுதியில் இருந்து அதிகளவில் புறப்படத் தொடங்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பிரான்ஸின் டியெப் பகுதி அதிகாரிகள் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிரான தங்களது சோதனைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வரும் சிறிய ரகப் படகுகள், பிரம்மாண்ட வணிகக் கப்பல்களின் அலைகளில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சாத்தியங்கள் மிக அதிகமாக உள்ளதால், இந்த நீண்ட தூரப் பயணங்கள் அகதிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.













