பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் ( Keir Starmer) தனது பிரதமர் பதவியையும், ஆளும் தொழிற்கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன், அதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளார்.
தனது இந்த திடீர் முடிவு குறித்து பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கும் (King Charles III) அவர் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொழிற்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் போட்டிக்கான கால அட்டவணையைத் தயாரிக்குமாறு கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவிடம் தான் கேட்டுக்கொண்டுள்ளதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அதன்படி , புதிய தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தின் கோடைகால விடுமுறைக்கு முன்னதாக, ஜூலை 16 ஆம் திகதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும்.
இதேவேளை, தொழிற்கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டி ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்றத்தின் கோடைகால விடுமுறை முடிந்து, வரும் செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, பிரிட்டனுக்குப் புதியதொரு பிரதமர் கிடைப்பதை இந்தக் கால அட்டவணை உறுதி செய்யும் என ஸ்டார்மர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவின் ஆளும் கட்சியின் தலைமைப் பதவியில் ஏற்படவுள்ள இந்த மாற்றம், அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர உறவுகளில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால், உலக நாடுகளின் கவனம் தற்போது லண்டனை நோக்கித் திரும்பியுள்ளது.
















