ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் நேற்று இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 30 வயதுடைய இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தீவிர உறுப்பினராக இருந்ததுடன், அவர் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞரணி ஊடக செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இக்கொலைச் சம்பவத்தில் ஹங்குருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய அரசியல் செயற்பாட்டாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (27) இரவு நடைபெற்ற மதுபான விருந்தொன்றின் போது, அங்கிருந்த சிலருக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் விஸ்வரூபம் எடுத்து முற்றியதையடுத்து, அங்கிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தை எடுத்து குறித்த ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞரணிச் செயலாளரைத் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வன்முறை மோதலைத் தடுக்க முயன்ற போது, சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கொலைச் சம்பவம் குறித்து உடனடியாகக் களமிறங்கிய வீரகெட்டிய பொலிஸார், கொலையுடன் தொடர்புடைய முதன்மைச் சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மெதமுலன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனப் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பிரதான எதிர்க்கட்சியின் மாவட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்பதால், இக்கொலைக்குக் காரணம் வெறும் தனிப்பட்ட குரோதமா அல்லது அரசியல் ரீதியான ஏதேனும் பின்னணிகள் உள்ளதா என்ற கோணத்திலும் வீரகெட்டிய பொலிஸார் தங்களது மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் ஹம்பாந்தோட்டை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/share/v/1L2ug2URU1/














