வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஏனையோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிமன்றத்தினால் மீளப் பெறப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் காணி உரிமையாளருமான சாருஜன் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இவ் வழக்குடன் தையிட்டி விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய வழக்குகளும் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, இந்த வழக்குகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் நேற்று உடனடியாகவே நீதிமன்றத்தில் முன்னிலையாகி சட்டத்தரணி கஜேந்திரன் ஊடாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் அவர்கள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கத் தவறியமைக்காக விதிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெற்றுள்ளது.












