இலங்கையில் விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்தியக் குடிமகன் அட்டை, சான்றொப்பம் மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான புதிய வெளிப்பணி சேவை வழங்குநராக அல்ஹிந்த் குளோபல் சர்வீசஸ் (Alhind Global Services)தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி முதல் இந்த புதிய சேவை வழங்குநரால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டியில் உள்ள உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம், மேலும் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள துணைத் தூதரகங்களின் சேவைகளையும் அல்ஹிந்த் குளோபல் சர்வீசஸ் (Alhind Global Services) முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் (ICAC) ஒன்றும் திறக்கப்படவுள்ளது.
ஜூலை மாதம் 7 ஆம் திகதி முதல், விண்ணப்பதாரர்கள் ICAC இலங்கை இணையதளம் மூலம் விசா, கடவுச்சீட்டு, OCI மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான சந்திப்பு நேரங்களை முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள மையங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.











