திருகோணமலை கடற்பரப்பில் 03ஆம் திகதி மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் கிடைத்த அவசரத் தகவலுக்கு அமைவாக, இலங்கை கடற்படையினர் பிரதேச மீனவர்களின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை (SAR) ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, 02ஆம் திகதி மாலை கொட்பே, வீரநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் பயணித்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததை அடுத்து, இரண்டு மீனவர்கள் மீண்டும் டிங்கி படகிற்குள் ஏறிக் கொண்டு தப்பியுள்ள நிலையில் இந்த விபத்து குறித்து அவர்கள் இலங்கை கடற்படைக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதில் காணாமல் போன மீனவர், குறித்த டிங்கி படகின் உரிமையாளர் என நம்பப்படுகின்றது.
மேலும், பிரதேச மீனவர்களின் உதவியுடன், கடற்படையின் ரோந்துப் படகுகள் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் இணைந்து காணாமல் போன மீனவரைத் தேடும் பணியை தற்போது வரை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














