OPEC+ எண்ணெய் உற்பத்தி கூட்டமைப்பில் உள்ள சில நாடுகள் அடுத்த மாதம் தங்கள் உற்பத்தியை ஓரளவுக்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஈரானுடன் போரிடுவதற்கு முந்தைய காலத்திற்குப் பின்னர் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலைகள் சரிந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை சந்தைக்குக் மேலதிக எண்ணெயைக் கொண்டுவரும்.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு மற்றும் அதன் பங்காளிகள் (இவை கூட்டாக ‘OPEC+’ என்று அழைக்கப்படுகின்றன) ஆகஸ்ட் மாதத்தில் ஏழு நாடுகள் தங்கள் எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு மொத்தம் 1,88,000 பீப்பாய்கள் அளவுக்கு அதிகரிக்கும் என்று ஞாயிற்றுக்கிழமை (05) அறிவித்தன.
எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க OPEC+ அமைப்பு ஒப்புக்கொண்ட தொடர்ச்சியான ஐந்தாவது மாதம் இதுவாகும்.
ஞாயிற்றுக்கிழமையன்று எடுக்கப்பட்ட முடிவில் பங்கேற்ற நாடுகள் சவுதி அரேபியா, ரஷ்யா, ஈராக், குவைத், கஜகஸ்தான், அல்ஜீரியா மற்றும் ஓமன் ஆகும்.
கடந்த மாதத்தில், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் எட்டுவதற்கு முன்னரும் பின்னரும், சந்தையில் நிலவிய நம்பிக்கையின் காரணமாக மசகு எண்ணெய் விலைகள் சரிந்தன.
ஒரு பரந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் தடையின்றிச் செல்ல அனுமதிக்க ஈரான் ஒப்புக்கொண்டது; அதேவேளையில், ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது.
போருக்கு முன்பு உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைத் தாங்கிச் சென்ற இந்த நீரிணை வழியாக, அதன்பிறகு அதிக எண்ணிக்கையிலான வணிகக் கப்பல்கள் கடந்து சென்றுள்ளன.
இருப்பினும், கப்பல் போக்குவரத்து இன்னும் போருக்கு முந்தைய அளவை எட்டவில்லை; அத்துடன் இந்த நீர்வழிப் பாதை தொடர்பான பதற்றங்களும் நீடிக்கின்றன.
இந்த நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களும் தாங்கள் அங்கீகரித்த வழித்தடங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் கூட்டு இராணுவத் தலைமையகம் கடந்த வியாழக்கிழமையன்று எச்சரித்தது.
இதனிடையே, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை இரவு எண்ணெய் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 72 டொலருக்கும் குறைவான விலையில் வர்த்தகமானது.
பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இருந்த விலைக்கு இது ஏறக்குறைய சமமானதாகும்.
அதேவேளையில், மார்ச் மாதத்தில் ஒரு பீப்பாய் 120 டொலர் வரை உயர்ந்திருந்த உச்ச விலையை விட இது மிகவும் குறைவானது.










