நிலவும் மோசமான வானிலை சூழலைக் கருத்தில் கொண்டு, மும்பைக்கான பேரிடர் எச்சரிக்கை வழிகாட்டுதல்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (SDMA) வெளியிட்டுள்ளது.
தனியார் அலுவலகங்கள் முடிந்தவரை ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்குமாறும், அத்தியாவசியமற்ற அரசு அலுவலகங்கள் அரை நாள் மட்டும் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘சிவப்பு எச்சரிக்கை’ (red alert) விடுத்துள்ளது.
மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று (06) காலை விட்டுவிட்டுப் பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்றினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனால் புனேவுக்கான தொலைதூர ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன, ராய்காட் பகுதியில் புறநகர் ரயில் சேவைகள் தடைபட்டன, மேலும் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீரால் வாகனப் போக்குவரத்தும் மந்தமடைந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் பகல் நேரத்தில் மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
இதற்கிடையில், நேற்றிரவு இரவு பெய்த பலத்த மழையின்போது, மும்பையின் மன்குர்ட் (Mankhurd) பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் (chawl) இடிந்து விழுந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை, புனே, தானே மற்றும் பால்கர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.














