மறைந்த உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கிற்காக, ஈரான் தனது தலைநகரான தெஹ்ரானில் திங்களன்று (06) ஒரு ஊர்வலத்தைத் தொடங்கியது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடங்கிய போரின் ஆரம்பத்தில், பெப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட காமினியின் குடும்பத்தினரின் சடலங்களுடன், அவரது சடலமும் தேசியக் கொடி போர்த்தப்பட்ட நிலையில் ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது.
ஒரு இமாமின் புனிதத் தலத்தைச் சுற்றியுள்ள அலங்காரத் தடுப்பு வேலியைப் போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் அந்த வாகனத்தின் பக்கவாட்டுப் பகுதி அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கருப்பு உடை அணிந்த துயருற்ற மக்கள் கூட்டத்தின் ஊடாக அந்த வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது.

பூதவுடல் தாங்கிய பெட்டிகள் தெஹ்ரான் வீதிகள் வழியாக மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு 12 மணி நேரப் பயணமாக எடுத்துச் செல்லப்படும் என்று இறுதி ஊர்வலத்தை மேற்பார்வையிடும் புரட்சிகரப் படை ஜெனரல் ஹசன் ஹசன்சாதே கூறினார்.
அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், நகரம் முழுவதும் நடைபெறவுள்ள விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று ஈரானின் மதத் தலைமை எதிர்பார்க்கிறது.
ஈரானியத் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூன்று மகன்கள், ஞாயிறன்று அவருக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற நால்வருக்கும் வைக்கப்பட்டிருந்த பூதவுடல் தாங்கிய பெட்டிகளுக்கு அருகே நின்று பிரார்த்தனை செய்தனர்.
ஆனால், கமேனிக்குப் பின்னர் ஈரானின் உயரிய தலைவராகப் பொறுப்பேற்ற அவரது மகன் மொஜ்தபா இதில் கலந்துகொள்ளவில்லை.
சனிக்கிழமை தொடங்கிய துக்க நிகழ்வுகளுக்காக ஈரானிய அதிகாரிகள் பல சாலைகள் மற்றும் வான்வெளியை மூடியதுடன், அன்றாட நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளனர்.
86 வயதான கமேனியின் உடல் அவரது பிறந்த இடமான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசா ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும் வியாழக்கிழமையுடன் இந்தத் துக்க நிகழ்வுகள் நிறைவடையும்.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறப்பது, சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டத்தைக் கைவிடுவது மற்றும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
எனினும், இறுதிச் சடங்கு முடியும் வரை இந்தப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.













