கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 71 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக தெரிவித்தார்.
பதிவாகியுள்ள டெங்கு பாதிப்புகளில் பெரும்பாலானவை கலைப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்தே கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலை மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பல பீடங்களின் விரிவுரைகளை ஒரு வார காலத்திற்கு இணையம் மற்றும் கலப்பு (hybrid) முறைகளில் நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பல்கலைக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவர்களின் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.
டெங்குவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குணமடைவதற்கு ஓய்வு மிக முக்கியம் என்பதால், விரிவுரைகளை இணையவழியில் நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்திற்குள் டெங்கு பாதிப்பு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
காய்ச்சல் அறிகுறிகள் உள்ள மாணவர்கள் வைத்தியசாலை ஆலோசனையைப் பெறுமாறும், சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்புகள் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என்றும், கல்வி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்றும் துணைவேந்தர் மேலும் தெளிவுபடுத்தினார்.












