நுவரெலியாவில் பெண் பிசியோதெரபிஸ்ட் (physiotherapist) ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக இன்று (09) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இக்கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரிடமிருந்து இரத்த மாதிரியைப் பெற அனுமதிக்குமாறு நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கிணங்க, தேவையான இரத்த மாதிரியைப் பெறுவதற்காக, சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள சட்ட மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பின்னர், சிறைச்சாலை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பலத்த பாதுகாப்போடு சந்தேக நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இரத்த மாதிரி பெறப்பட்டதன் பின்னர், நான்கு சந்தேக நபர்களும் மீண்டும் நுவரெலியா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை 16, வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
2026 ஜூன் 17 அன்று தெல்தெனியவில் உள்ள கார் ஒன்றிற்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
உயிரிழந்த பெண் ஜூன் 3 முதல் ஜூன் 16 வரை நுவரெலியாவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றிற்குள் பெண்ணின் சடலம் இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி மூலம் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததன் மூலமே இச்சம்பவம் தெரியவந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அதற்கிணங்க, இக்கொலையைச் செய்ததாகக் கூறப்படும் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய பிசியோதெரபிஸ்ட் என அடையாளம் காணப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












