ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ (IRGC) பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு குழுவாக அறிவிக்கப்படும் என்றும், அதற்கு ஆதரவு வழங்குவது முற்றாகத் தடை செய்யப்படுவதாகவும் பிரிட்டன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பிரிட்டனில் அரங்கேற்றப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்களுடன் தொடர்புடைய இந்த ஈரான் நாட்டு இராணுவக் குழுவிற்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட அரசாங்கத்தின் புதிய அதிகாரங்களை உள்துறைச் செயலர் பயன்படுத்தவுள்ளார்.
இந்தத் தடையுத்தரவின் மூலம், பிரிட்டன் பொலிஸாருக்கும் உளவு அமைப்புகளுக்கும் புதிய மற்றும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் வெளிநாட்டு உளவுவேலைகள் , வெளிநாட்டுத் தலையீடுகள், நாசவேலைகள் மற்றும் உடல்ரீதியான வன்முறைத் தாக்குதல்களை முறியடிக்கப் பாதுகாப்புப் பிரிவினருக்குச் சட்ட ரீதியான பலம் கிடைத்துள்ளது எனவும் உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.












