இலங்கையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனைகளை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இப்பரிசோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அச்சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பொதுப் போக்குவரத்து வாகன விபத்துக்கள் குறித்துக் கருத்து வௌியிட்ட தலைவர் மஞ்சுள குலரத்ன:
“நாட்டில் ஏற்படும் பெரும்பாலான வீதி விபத்துக்களுக்குச் சாரதிகளின் கவனயீனமான ஓட்டுமுறை மற்றும் வாகனங்களில் நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகளுமே பிரதான காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், இந்த விவகாரத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் கடுமையான தரப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டார்.
இந்தத் தரப் பரிசோதனைத் திட்டத்தை முறையான தொழில்நுட்பத் தரத்துடன் முன்னெடுப்பதற்காகத் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்ளும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆட்சேர்ப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், திட்டமிட்டபடி செப்டெம்பர் மாத இறுதிக்குள் தரப் பரிசோதனைச் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்.
இதன் மூலம் வீதிகளில் பயணிக்கும் தகுதியற்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு, விபத்துக்களைப் பெருமளவில் குறைக்க முடியும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.













