நியூ ஜெர்சியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், கூடுதல் நேரத்தில் ஸ்பெய்னிடம் 1-0 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டினா தோல்வியடைந்த மறுநாளான திங்கட்கிழமை, அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
ஆர்ஜென்டினாவைக் காப்பாற்ற மீண்டும் ஒருமுறை தனது மாயாஜாலத் திறனை வெளிப்படுத்த முடியாத நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று மெஸ்ஸி கண்ணீர் சிந்தினார்.
அத்துடன் அவரது சர்வதேசக் கால்பந்து எதிர்காலமும் கேள்விக்குறியானது.
எட்டு முறை ‘பாலன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வென்ற அவர், ஆட்டத்திற்குப் பின்னர் ஆர்ஜென்டினா ரசிகர்களின் உற்சாக வரவேற்பைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு உடைந்து போனார்.
ஏறக்குறைய 24 மணிநேரத்திற்குப் பின்னர், சமூக ஊடகங்கள் வாயிலாக அந்தத் தோல்வி ஏற்படுத்திய வேதனையைப் பகிர்ந்துகொண்ட அவர், வெற்றி பெற்ற ஸ்பெய்ன் அணிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது தொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவில்,
தோல்வியின் வேதனை மிகப்பெரியது. இந்த காயம் ஆறுவதற்கு காலம் தேவைப்படும்.
ஆனால், நாங்கள் அனைத்தையும் அர்ப்பணித்து போட்டிகளை வெற்றிப் பாதைக்கு திருப்பிய தருணங்களையும், என்றும் நினைவில் நிற்கும் இனிய நினைவுகளையும் நான் பற்றிக்கொண்டு இருக்கிறேன்.
இந்த அணியின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும், முழு நாட்டின் ஆதரவும்தான் எங்களை மீண்டும் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக உயர்த்தியது. அந்த ஆதரவை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.
எங்களது பயணத்தில் உருவான அந்த மறக்க முடியாத தருணங்கள் என்றும் நினைவுகளில் நிலைத்திருக்கும் என நான் நம்புகிறேன்.
ஆர்ஜென்டினராக இருப்பதில் உள்ள அளப்பரிய பெருமையைப் பகிர்ந்துகொண்டு, ஒரு நாடாக மீண்டும் ஒன்றிணைந்து நிற்க நம்மால் முடிந்தது.
சம்பியன் பட்டம் வென்ற ஸ்பென்னுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் – என்று ஸ்பானிஷ் மொழியில் எழுதியுள்ளார்.
இன்டர் மியாமி அணியின் முன்கள வீரரான அவர், தொடர்ச்சியான கோபா அமெரிக்கா சம்பியன்ஷிப் பட்டங்களுக்கு (2021 மற்றும் 2024) இடையில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்சுக்கு எதிராக ஆர்ஜென்டினாவை வெற்றிக்கு வழிநடத்தினார்.
இந்தத் தொடரில், மெஸ்ஸி தனது சர்வதேச கோல்களின் எண்ணிக்கையை 125 ஆக உயர்த்தினார், இது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 146 கோல்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று, தேசிய அணிக்கான மெஸ்ஸியின் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, ஆர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் கிளாடியோ டபியா அவருக்குச் சிறப்பான மரியாதை செலுத்தினார்.
மூன்று உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் ஆடும் முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றார்.
எனினும், இந்தத் தொடரில் எட்டு கோல்கள் மற்றும் நான்கு கோல் உதவிகளுடன் ஜொலித்திருந்த அவர், ஸ்பெய்னுக்கு எதிரான போட்டியில் சிறப்பாகச் செயல்படத் தவறினார்.












