நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன.
மேலும், விபத்தில் சிக்கிய மீனவர்களைத் தேடும் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 412’ (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று (31) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற டிங்கி படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை, மற்றொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் மூலமே முதன்முதலில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இச்சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மீன்பிடிக்கச் சென்ற மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது வரை, விபத்துக்குள்ளான ஒரு படகில் இருந்த மீனவர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் ஒதுங்கியுள்ள நிலையில், அதே படகில் பயணித்த மேலும் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, காணாமல் போன மீனவர்களையும் படகுகளையும் தேடுவதற்காகக் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விசேட மூழ்கிச் செல்லும் (Diving) அணியினருடன் கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், வான் மற்றும் கடற்படைப் பிரிவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.















