கடந்த ஆண்டு ஒகஸ்ற் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தின் 43ஆவது பந்தியில் ஒரு விடயம் உள்ளது.இலங்கைத் தீவின் இன முரண்பாட்டு வரலாற்றில் பாலியல் வன்கொடுமைக் குற்றம் புரிந்ததற்காக படைத் தரப்பு தண்டிக்கப்பட்ட ஒரே ஒரு சந்தர்ப்பம் கிரிசாந்தி கொலை வழக்குத்தான் என்று அப்பந்தியில் கூறப்பட்டுள்ளது.அதன்பின் விஸ்வமடு பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிப்பாய்களுக்கு 25ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டாலும்,பின்னர் மேல்முறையீட்டின் மூலம் அவர்கள் வெளியே வந்ததாகவும் அந்தப் பந்தியில் கூறப்பட்டுள்ளது.அதாவது இன முரண்பாட்டின் வரலாற்றில் பாலியல் வன்கொடுமைக் குற்றம் இழைத்த படைத் தரப்பு தண்டிக்கப்பட்ட ஒரே ஒரு சந்தர்ப்பம் கிரிசாந்தி கொலை வழக்குத்தான்.
அதில் தண்டிக்கப்பட்ட இளநிலை அதிகாரியான சோமவன்ச ராஜபக்ச அந்தக் குற்றத்தைத் தான் புரியவில்லை என்றும்,தான் ஒரு கருவி மட்டுமே என்றும், தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்.தன்னை ஏவிய மேலதிகாரிகள் சிறைக்கு வெளியே பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும்,தன்னைப் பலியாடு ஆக்கிவிட்டார்கள் என்றும் அவர் தொடர்ந்து கூறுகிறார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் அவருடைய மனைவியும் தன் கணவன் கூறியவற்றை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறார்.ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ராஜபக்சவின் வாக்குமூலத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
மற்றொரு வழக்கில் மிருசுவில் கொலைச் சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்ட படை இளநிலை அதிகாரியான சார்ஜன்ற் சுனில் ரட்நாயக்கவுக்கு 2015 இல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.ஆனால் 2020இல் கோட்டாபய ராஜபக்ச தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிக்கு மன்னிப்பளித்தார்.
எனினும் அவ்வாறு மன்னிப்பு அளிக்கப்பட்டவர் தனது நாட்டுக்கு வர முடியாது, அவருக்குப் பயணத் தடை விதிக்கப்படுகிறது என்று கனேடிய அரசாங்கம் அறிவித்தது.குற்றவாளிளுக்கு மன்னிப்பு வழங்கிய கோத்தபாய ராஜபக்சவுமுட்பட ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கனடாவுக்குள் பயணம் செய்வதற்கும்,சொத்துக்களை வைத்திருப்பதற்கும்,முதலீடு செய்வதற்கும் தடை உண்டு.உள்நாட்டில் மன்னிப்பு வழங்கப்பட்ட குற்றவாளியை ஒரு வெளிநாடு தண்டித்திருப்பது என்பது மிக அரிதான ஒரு தோற்றப்பாடு.நீதிக்காகப் போராடும் தமிழ் மக்கள் தங்களுக்கு பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள்.அந்தக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் ஒரு வெளிநாட்டுத் தடை அது.
மேற்சொன்ன உதாரணங்களில் ஆகப்பிந்திய விடயம் கடந்த கிழமை இடம்பெற்றது.ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முன்னாள் போலீஸ்மா அதிபருக்கும் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளருக்கும் ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கைத் தீவின் போலீஸ் வரலாற்றில் 160 ஆண்டுகளில் ஒரு முன்னாள் போலீஸ் மா அதிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை. அதுபோலவே ஒரு பாதுகாப்புத் துறைச் செயலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை.
அவர்கள் மேன் முறையீடு செய்ய முடியும்.ஆனாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதிக்குள் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் விதத்தில் முன்னெடுத்திருக்கும் ஆகப்பிந்திய நடவடிக்கையாக இந்தத் தண்டனைகளைக் குறிப்பிடலாமா?
அதேசமயம் இந்தத் தண்டனைகளும் இவற்றுடன் தொடர்புடைய கைது நடவடிக்கைகளும் விசாரணைகளும் நமக்கு ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.இதில் தண்டிக்கப்பட்டிருப்பவர்களில் ஒருவர் முன்னாள் போலீஸ்மா அதிபர்.மற்றொருவர் முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலர். இவர்களைத் தவிர சுரேஷ் சலேயும் விசாரணைக் காவலில் உள்ளார். சுரேஷ் சலே ராணுவத்தின் மேஜர் ஜெனரல் தர தளபதி ஆவார்.இலங்கைத் தீவின் சக்தி மிக்க புலனாய்வுக் கட்டமைப்பின் பணிப்பாளராக இருந்தவர்.
அதாவது முன்னாள் போலீஸ்மா அதிபர்,முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலர்,முன்னாள் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் போன்றவர்கள் குற்றச்சாட்டப்பட்டிருக்கிறார்கள்;அல்லது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.இது எதனைக் காட்டுகிறது? இலங்கைத் தீவின் சட்டம்,நீதி,ஒழுங்கு என்பவற்றைப் பாதுகாக்க வேண்டிய கட்டமைப்புகளின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் எந்த அளவுக்குக் குற்றம் நிகழ்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதைத்தான்.
இதைத் தனிப்பட்ட ஒரு முன்னாள் போலீஸ்மா அதிபர், முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலர் ,அல்லது முன்னாள் புலனாய்வுக் கட்டமைப்பின் பணிப்பாளர் போன்றவர்களின் தனிப்பட்ட குற்றங்களாக எடுத்துக் கொள்ள முடியாது.அவை யாவும் கட்டமைப்புசார் குற்றங்கள்.அவர்களைப் போன்றவர்கள் உயர் பொறுப்பில் இருக்கும் அளவுக்கு அந்தக் கட்டமைப்புகள் குற்றப் பண்புடையவைகளாக இருந்திருக்கின்றன என்று பொருள்.இது திடீரென்று நிகழவில்லை.இந்தக் குற்றங்கள் வெற்றிடதில் நிகழவில்லை.இதற்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு.தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைப் பாரம்பரியத்தின் விளைவு இது.தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிபவர்கள் ஒன்றில் மன்னிக்கப்படுகிறார்கள்,அல்லது தப்பிச் செல்கிறார்கள். இவ்வாறு குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசியல் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் மேற்சொன்ன குற்றச் செயல்களையும் மேற்சொன்ன கட்டமைப்புகளையும் பார்க்க வேண்டும்.
அதாவது ஈஸ்டர் குண்டு வெடிப்பு வெற்றிடத்தை நிகழவில்லை.அது நாட்டில் ஏற்கனவே நிலவிவந்த குற்றப் பண்புமிக்க கட்டமைப்புசார் பாரம்பரியம் ஒன்றின் தொடர்ச்சிதான்.ஆனாலும் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு நீதி கேட்கும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நியாயப்படுத்துகிறார்.அண்மையில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்,தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டது இன அழிப்புக் குற்றமே என்று கூறிய பொழுது,அதனை மறுத்து பேராயருடைய ஊடகக் கட்டமைப்பைச் சேர்ந்த ஒரு அருட்தந்தை மேற்கண்டவாறு கூறியிருந்தார்.அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றது இன அழிப்பு அல்ல;அது பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு போர் என்று கூறப்படுகிறது.இதன் பொருள் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு அந்தப் போர் தவிர்க்க முடியாதது என்பதுதான்.
இவ்வாறு தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்காத ஒரு பேராயர், ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு நீதி கேட்டுப் போராடும் ஒரு நாட்டிலே, கடந்த வாரம் ஈஸ்டர் குண்டு வெடிப்போடு தொடர்புடைய இரண்டு உயர் பொறுப்பில் இருந்தவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இது கடந்த இரண்டு ஆண்டு கால பகுதிக்குள் இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை அனைத்துலக அளவில் பலப்படுத்துவதற்கு தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஆகப்பிந்தியது எனலாம்.இதன்மூலம் செம்மணிக்கு உள்நாட்டிலேயே நீதி கிடைக்கும் என்று உலகத்தை நம்பச் செய்யலாம்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளரும் அவ்வாறு நம்புவதாகத் தெரிகிறது.
ஆனால் கடந்த மாத இறுதியில் செம்மணியில் யாழ்.மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருவானவர்கள் அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்தார்கள். அந்தப் பேரணி செம்மணிக்கு நீதி கேட்டு முன்னெடுக்கப்பட்டது.பேரணியின் முடிவில் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை ஒருவர்,செம்மணிப் புதைகுழிக்கு பன்னாட்டு விசாரணைகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.யாழ்.மறை மாவடட குருவானவர்களின் அந்தக் கோரிக்கையை கொழும்பு பேராயர் ஏற்றுக்கொள்வாரோ தெரியவில்லை. ஆனால் தமிழ் மறை மாவட்டங்கள்,தமிழ் மக்களின் கூட்டுக் காயங்களோடும்,கூட்டு மனவடுக்களோடும்,கூட்டுக் கோரிக்கைகளோடும் நிற்கின்றன என்பதைத்தான் அந்தப் பேரணி உணர்த்துகின்றது.
தமிழ் மக்கள் மட்டும் பன்னாட்டு விசாரணையைக் கேட்கவில்லை.அல்லது தமிழ் மக்கள் மட்டும் பன்னாட்டு விசாரணையை நம்பவில்லை.குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சுரேஷ் சலேயும் அவருடைய வழக்கறிஞரும் அவ்வாறு நம்புவதாகத் தெரிகிறது.அண்மையில் சுரேஷ் சலேயின் வழக்கறிஞர் சஞ்சீவ ஜெயவர்தன அக்கருத்தைத் தெரிவித்திருந்தார்.அனைத்துலக விசாரணைகளின் அடிப்படையில் தமது கட்சிக்காரர் குற்றமற்றவராகக் காணப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.அதாவது பன்னாட்டு விசாரணைப் பொறிமுறைகள் நம்பகத்தன்மை மிக்கவை என்பதனால் அதை ஓர் ஆதாரமாக அவர் காட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?இது தமிழ் மக்களுக்கும் பொருந்தும்தானே?













