ஈரான் தொடர்பான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதன் தற்போதைய நிலை குறித்து அதிகரித்துவரும் அதிருப்தியில் உள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
போருக்கு முடிவுகட்டும் வகையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முக்கிய அம்சங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அண்மையில் தெரிவித்துள்ளார். இதனால், போரை நிறுத்தும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
எனினும், டிரம்பின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகமொன்று வெளியிட்ட தகவலின்படி, போர் எவ்வளவு காலம் நீடிக்கும், அதை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது என்பதில் தெளிவான மூலோபாயம் இல்லாதது குறித்து டிரம்ப் கடும் ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. போரின் இறுதி இலக்கை அடைவதற்கான திட்டமிடல் போதுமானதாக இல்லை என்பதே அவரது கவலையாக இருப்பதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புதன்கிழமை அமெரிக்க இராணுவம் ஈரானின் பல இலக்குகளை குறிவைத்து தீவிர வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது. இது “கனரக தாக்குதல்களின் அலை” என அமெரிக்க இராணுவம் விவரித்துள்ளது.
அதேவேளை, தொலைபேசி உரையாடலொன்றின் போது டிரம்ப், ஈரானுக்கு எதிராக மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றங்கள், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் இன்னும் முழுமையாக தணியாததையும், அதே நேரத்தில் இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகின்றன.



















