செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது ஈரானுடன் தனது நிர்வாகம் மிகச் சிறந்த விவாதங்களை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
இந்த முன்னேற்றம் ஐந்து மாத கால மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் முற்றுகையிடப்பட்ட ஹார்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என்ற நம்பிக்கையில் வோல் ஸ்ட்ரீட் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
அத்துடன், புதன்கிழமை ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் சரிந்து பங்குகள் உயர்ந்தன.
சர்வதேச செய்திச் சேவையான ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், அமெரிக்க அதிகாரிகள் நாள் (செவ்வாய்) முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஹார்முஸ் நீரிணை மிக விரைவில் திறக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.
மேலும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் பின்வாங்கினால், அவர்கள் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டத் தவறினால் கடுமையான தாக்குதல்களை நடத்துவதாக ட்ரம்ப் பலமுறை மிரட்டியுள்ளார்; அதேவேளையில், இதுவரை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரத் தவறிய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த நீர்வழியின் ஒரு பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓமானின் ஒப்புதலுடன், அந்த நீரிணைப் பாதையை மீண்டும் திறப்பதற்கான இடைக்கால ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்காவும் ஈரானும் நெருங்கியுள்ளதாக ‘ஆக்சியோஸ்’ (Axios) செய்தி வெளியிட்டுள்ளது;
பிராந்தியத்தைச் சேர்ந்த இரு தரப்புத் தகவல்கள் மற்றும் அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகியுள்ளது.
புதன்கிழமையன்று இது குறித்த அறிவிப்பை வெளியிட வொஷிங்டன் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இருப்பினும், ஈரான் மீதான அச்சுறுத்தலை அமெரிக்கா தொடர்ந்து விடுக்கும் வரை, ஓமன் நாட்டுடனான அந்த நீரிணை தொடர்பான ஒப்பந்தம் தாமதமாகும் என்று ஈரான் அரசு ஊடகம் ஒன்று நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டித் தெரிவித்துள்ளது.














