சர்வதேச கால்பந்து சம்மேளனமான ‘ஃபிஃபா’ (FIFA) மற்றும் அதன் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் (Gianni Infantino) நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஃபிஃபா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் டெய்லி டெலிகிராஃப் (Daily Telegraph) ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஜியானி இன்ஃபான்டினோ ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் (UEFA) பொதுச்செயலாளராக இருந்தபோது ஏற்பட்ட தனிப்பட்ட உறவு தொடர்பான விவகாரத்தில், இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை இன்ஃபான்டினோ முற்றிலும் மறுத்துள்ளதாகத் தெரிவித்த ஃபிஃபா, ஆதாரமற்ற பொய்களை உண்மையாகச் சித்தரிக்க வேண்டாம் எனக் கண்டித்துள்ளது.
வணிக உரிமைகளைத் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் எஃப்.எஃப்.ஈ (FFE) திட்ட முன்மொழிவு காரணமாக ஐரோப்பிய அமைப்புகள் இன்ஃபான்டினோ மீது அதிருப்தியில் உள்ளன.
நோர்வே கால்பந்து சம்மேளனத் தலைவர் லிஸ் கிளாவெனெஸ், இன்ஃபான்டினோவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளதுடன், ஃபிஃபா தொடர்களை புறக்கணிக்கப் போவதாகவும் யுவேஃபா எச்சரித்துள்ளது.
இருப்பினும், ஆப்பிரிக்கக் கால்பந்து சம்மேளனத்தின் (CAF) 54 நாடுகள், தென்னமெரிக்கா (CONMEBOL) மற்றும் மெக்சிகோ ஆகியவை இன்ஃபான்டினோவிற்குத் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை அவதூறுகள் மூலம் பதவி விலக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஃபிஃபா, அமைப்பின் வளர்ச்சியைக் கெடுக்கும் நோக்கில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாகவும் வலுவாகவும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
















