உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), அரசியலமைப்பிற்கான முன்மொழியப்பட்ட 22 ஆவது திருத்தத்தை வன்மையாக எதிர்த்துள்ளது.
வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதையும் நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதே இந்த முன்மொழியப்பட்ட மாற்றம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், இந்த மும்மொழிவு ஆகஸ்ட் 7 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இருப்பினும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கும் அந்த நோக்கங்களை அடைவதற்கும் இடையிலான தொடர்பு தெளிவாக இல்லை என்று BASL கூறியது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் நளின் டி சில்வா ஆகியோரின் கையொப்பங்களுடன் இன்று (12) வெளியிடப்பட்ட அறிக்கையில், முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடித் தலையீடாக அமைகிறது என்ற அடிப்படையில், BASL மற்றும் நீதித்துறை சேவை சங்கம் உள்ளிட்ட சட்டத்துறை சமூகம் அதனை எதிர்ப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள முக்கிய சட்ட மற்றும் நீதிபதிகள் சங்கங்கள் ஆகியவையும் இம்முன்மொழிவு குறித்துத் தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இதற்கு பொது வாக்கெடுப்பு அவசியம் என்று BASL கூறுகிறது.
முன்மொழியப்பட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியுமா என்பது BASL அமைப்பால் எழுப்பப்பட்டுள்ள ஒரு முக்கிய விவகாரமாகும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும், அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும், எனவே அதற்கு மக்கள் வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதல் தேவை என்றும் அந்தச் சங்கம் வாதிடுகிறது.
நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான தலைப்பின் கீழ், அரசியலமைப்பின் 15 ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளதும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்துக் கூறுவதுமான அரசியலமைப்பின் 107 ஆவது பிரிவை BASL சுட்டிக்காட்டியது.
மேலும், இறையாண்மை மக்களிடமே உள்ளது என்று கூறும் பிரிவு 3 மற்றும் அந்த இறையாண்மையின் ஒரு பகுதியாக நீதித்துறை அதிகாரம் அங்கீகரிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் பிரிவு 4(c) ஆகியவற்றையும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியது.
பதவியில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயது அல்லது பதவிக்காலத்தைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிப்பதோடு பிரிவு 3-ஐயும் மீறுவதாக அமையும் என்றும், எனவே அதற்கு மக்கள் வாக்கெடுப்பு அவசியம் என்றும் 2022-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் (SC SD 64-71/2022) குறிப்பிடப்பட்டிருந்ததையும் அச்சங்கம் தனது வாதத்திற்கு அடிப்படையாகக் கொண்டது.
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தமானது மக்களின் ஒப்புதல் இன்றிச் சட்டப்பூர்வமாக இயற்றப்பட முடியாத, அரசியலமைப்பின் மிக முக்கிய மற்றும் அடிப்படை அம்சமாக அமைகிறது என்பதை இந்த நீதிமன்றத் தீர்ப்பு தெளிவுபடுத்துவதாகவும் BASL தெரிவித்தது.
அத்துடன், இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டால், ஒரு கடுமையான அரசியலமைப்புச் சிக்கல் ஏற்படக்கூடும் என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியது.
அப்போது, எந்தவொரு குடிமகனுக்கும் உயர் நீதிமன்றத்தில் இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து சவால் விடும் உரிமை கிடைக்கும் என்று BASL கூறியது.
அத்தகைய சவால், உயர் நீதிமன்ற நீதிபதிகளை மிகவும் சிக்கலான ஒரு நிலைக்குத் தள்ளக்கூடும் என்றும் அது வாதிட்டது.
ஏனெனில், நீதிமன்றம் தனது உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் ஒரு திருத்தத்தின் சட்டப்பூர்வ தன்மையை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
இது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, அதன் நம்பகத்தன்மையைச் சேதப்படுத்தும் என்று BASL எச்சரித்தது.
எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அரசாங்கம் இத்திட்டத்தைத் தொடர முடிவு செய்தால், அந்த சட்டமூலத்தை நேரடியாக மக்கள் வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்குமாறு அமைச்சரவையை அச்சங்கம் வலியுறுத்தியது.
BASL-இன் கருத்துப்படி, அவ்வாறு செய்வது மக்களுக்கு இம்விவகாரம் குறித்து முடிவெடுக்கும் வாய்ப்பை அளிக்கும்; அதேவேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தைப் பாதிக்கும் ஒரு நடவடிக்கையின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டிய சூழலையும் இது தவிர்க்க உதவும்.
மேலும், முக்கியத் தரப்பினருடன் அர்த்தமுள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி, அரசாங்கத்தின் நடவடிக்கையையும் அச்சங்கம் விமர்சித்தது.
நீதித்துறையின் பதவிக்காலத்தில் இது போன்ற மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு முன்னதாக வெளிப்படையான மற்றும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிற நாடுகளைப் போலன்றி, இலங்கையில் அத்தகைய ஆலோசனை நடைமுறை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று BASL சுட்டிக்காட்டியது.
அத்துடன், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை போதிய கலந்தாலோசனை இன்றி அவசரமாக முன்னெடுப்பது பொதுமக்களின் நம்பிக்கையை பாதிப்பதோடு, எதிர்கால அரசுகளுக்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையக்கூடும் என BASL எச்சரித்துள்ளது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தைப் பாதிக்கும் அரசியலமைப்பு மாற்றங்கள் மிகுந்த அவதானத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அணுகப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்ட நபர்களை இலக்காகக் கொண்டதாகப் பொதுமக்கள் கருதும் சூழல் உருவாகக் கூடாது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
நீதித்துறையின் சுயாதீனம் ஏன் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது என சில அமைச்சர்களும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள BASL, நீதிநிர்வாகத்தின் அடிப்படைத் தூணாக பொதுமக்களின் நம்பிக்கை விளங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
உண்மையான பாகுபாடு அல்லது தலையீடு இல்லாவிட்டாலும், அதுபோன்ற தோற்றமே உருவானால்கூட நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் நியாயத்தன்மை குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடும் என அது குறிப்பிட்டுள்ளது.
எனவே, நீதித்துறையின் சுயாதீனம், கண்ணியம் மற்றும் நற்பெயர் பாதுகாக்கப்பட வேண்டும் என BASL வலியுறுத்தியுள்ளது.
மேலும், அரசியலமைப்பு திருத்தங்கள் எந்த ஒரு அரசாங்கத்தையோ அரசியல் ஆட்சியையோ மட்டுமே பாதிப்பதல்ல; மாறாக நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பையும் நீதிநிர்வாக அமைப்பையும் தலைமுறைகள் முழுவதும் வடிவமைக்கக்கூடியவை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது தங்களது அரசியலமைப்பு பொறுப்பாகும் என்றும், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்காக அந்த பாதுகாப்புகள் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்றும் BASL வலியுறுத்தியுள்ளது.
இதனால், தற்போதைய வடிவில் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை முன்னெடுக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் BASL கோரிக்கை விடுத்துள்ளது. சுயாதீனமும் நம்பகத்தன்மையும் கொண்ட நீதித்துறையைப் பேணுவது பொதுமக்களின் நம்பிக்கை, சட்டத்தின் ஆட்சி மற்றும் இலங்கையின் அரசியலமைப்பு ஆட்சிக்குத் தவிர்க்க முடியாததாகும் என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அறிக்கையில் BASL தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் நளின் டி சில்வா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.









