அசல் வடிவத்திலும் சத்தத்திலும் மாற்றம் செய்யப்பட்ட, அத்துடன் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை விட அதிக கொள்ளளவு கொண்ட பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீரா இன்று (13) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
குழுக்களாகப் பயணிக்கும் சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மாத்திரைகள், கஞ்சா, ஐஸ் மற்றும் கொகைன் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்திவிட்டு, கட்டுப்பாடற்ற மனநிலையுடன் வாகனங்களைச் செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்காமல், மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்து சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்குத் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கோ அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் மற்றும் பொறுப்பான நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகவும் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் எனப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






