ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் தலைவர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கை புதிய பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளின் தேவையை குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானுக்கு எந்த வகையிலாவது உயிர்நாடி போன்ற உதவியை (பொருளாதார ரீதியிலான முக்கிய ஆதரவை) வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும், பொருளாதாரப் போர் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முந்தைய நாள் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்தே பெசென்ட் இக்கருத்துகளை வெளியிட்டார்.
இது குறித்த மேலதிக விவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, மத்திய கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட வேண்டிய இலட்சக்கணக்கான பீப்பாய் எண்ணெய் தேக்கமடையக் காரணமாக அமைந்த, ஏறக்குறைய ஆறு மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா நிதித் தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமையன்று மசகு எண்ணெய் விலை கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலான கால அளவில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
வளைகுடா நாடுகளையும் உள்ளடக்கிய இம் மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பெப்ரவரி மாதத்திற்கு முன்பு உலகளவில் வர்த்தகம் செய்யப்பட்ட எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கைத் தாங்கிச் சென்ற முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் தனது திறனை ஈரான் வெளிப்படுத்தியபோது, அது சந்தைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தடையின்றிச் செயல்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இருமுறை போர்நிறுத்த ஒப்பந்தங்களை அறிவித்தன.
ஆனால், அவை இரண்டுமே விரைவிலேயே முறிந்துபோயின.













