இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
அண்மைக்காலத் தரவுகளின் அடிப்படையில், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ள நிலையில், நாடு முழுவதிலுமுள்ள 76 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் பாதியளவிற்கும் அதிகமானோர், அதாவது 52.94% சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
மாகாண அடிப்படையில் மேல் மாகாணத்திற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 13,719 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,476 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 19,945 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாகக் கொழும்பில் 18,588 நோயாளர்களும், கண்டியில் 6,786 நோயாளர்களும், மாத்தறையில் 6,082 நோயாளர்களும், களுத்துறையில் 6,059 நோயாளர்களும், காலியில் 5,133 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,981 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாத அடிப்படையில் ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.













