கடந்த 8-வது மற்றும் 9-வது நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின் போது சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் கட்டுப்பாடு எதுவுமின்றி அதிகளவில் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளமை தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.
தணிக்கை அறிக்கையின் தரவுகளின்படி, சபாநாயகரின் எரிபொருள் பயன்பாட்டிற்கு எந்தவொரு வரம்பும் விதிக்கப்படாததால், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அவர் முறையே மாதத்திற்குச் சராசரியாக 3,994 மற்றும் 6,122 லீட்டர் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார்.
இது 2022 ஆம் ஆண்டை விட முறையே 66% மற்றும் 155% அதிர்ச்சியளிக்கும் அளவிலான உயர்வாகும்.
இதற்காக 2023 இல் 1.93 கோடி ரூபாயும் (ரூ. 19,373,866), 2024 இல் 2.60 கோடி ரூபாயும் (ரூ. 26,045,103) அரச நிதியிலிருந்து செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதி சபாநாயகருக்கு அனுமதிக்கப்பட்ட 3 அதிகாரப்பூர்வ வாகனங்களைத் தவிர்த்து, ஒரு தனியார் வாகனத்திற்காகத் தன்னிச்சையாக 21,299 லீட்டர் எரிபொருள் (மதிப்பு ரூ. 85,45,037) பெறப்பட்டுள்ளதுடன், அனுமதிக்கப்பட்ட 18,000 லீட்டர் வரம்பையும் மீறி மேலதிகமாக ஆயிரக்கணக்கான லீட்டர் எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குழுத் தலைவர் பதவிக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி 3 வாகனங்களும், வரம்பற்ற எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளதாக தணிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மறுபுறம், நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் 2022 மற்றும் 2023 காலப்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதுடன், 2022 முதல் 2024 வரையான காலத்தில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக மதிப்புடைய (ரூ. 6,071,690) 15,063 லீட்டர் எரிபொருளை நுகர்ந்துள்ளார்.
இது ஏனைய அமைச்சச்சுக்களின் செயலாளர்களை விடவும் மிக உயர்வான நுகர்வாகும். அத்துடன் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் உதவிப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குச் சாதாரண அரச அதிகாரிகளுக்கு இல்லாத வகையில், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அதிகளவிலான கிலோமீட்டர் சலுகைகளும், வரம்பற்ற எரிபொருள் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அத்தணிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














