நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும், தங்களுக்கான அஸ்வெசும நிதி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் பெருமளவான மக்கள் இன்று 24ஆம் திகதி பிரதேச செயலக வளாகத்தில் கூடியிருந்தனர்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த பலர், தங்களுக்கு இதுவரை நிதி கிடைக்காதமை தொடர்பில் விசாரிப்பதற்காகவும், தங்களது விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து அறிந்துகொள்வதற்காகவும் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன் காரணமாக, காலை முதல் நோர்வூட் பிரதேச செயலக வளாகத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
தங்களது பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சிலர், அஸ்வெசும நிதியை பெற்றுக்கொள்வதற்காக தாங்கள் பல தடவைகள் பிரதேச செயலகத்திற்கு வருகை தர வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், அதிகாரிகள் தங்களது வீடுகளுக்கு நேரடியாக வந்து நிலைமைகளை பார்வையிடவுள்ளதாகவும், அந்த ஆய்வின் பின்னரே அஸ்வெசும நிதி வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
சிலர் தங்களது விண்ணப்பங்கள் தொடர்பில் தெளிவான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனால் பல தடவைகள் பிரதேச செயலகத்திற்கு வர வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அஸ்வெசும நிதி என்பது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நலன்புரி உதவியாகும். எனவே, தகுதியுடையவர்களுக்கு உரிய முறையில் நிதி கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், தற்போது பெருமளவான மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பிரதேச செயலகத்தை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் அஸ்வெசும நிதி வெளிப்படையான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதே தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கோரிக்கையாகும்.














