துபாயில் கைது செய்யப்பட்டு இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கண்ணங்கராவுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹன்வெல்ல, நெலுவத்துவ, பாதுக்க, கொஸ்கம, கொள்ளுப்பிட்டி மற்றும் மீகொட ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு கொலைகள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், கப்பம் கோரி அச்சுறுத்தியமை மற்றும் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பிருப்பது பொலிஸ் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2013 ஆம் ஆண்டு ஹன்வெல்ல பகுதியில் நபர் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதுடன் இவருடைய குற்றப் பின்னணி ஆரம்பமாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தொழிலதிபர் ஒருவரிடம் கப்பம் கோரி அவரது வாகனத்திற்குத் தீ வைத்தமை, வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை, 2022 ஆம் ஆண்டு ஹன்வெல்ல பகுதியில் நபரொருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை (இதற்கான வழக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது) ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.
மேலும், 2023 ஆம் ஆண்டு பாதுக்க பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, 2024 ஆம் ஆண்டு ஹன்வெல்ல மற்றும் நெலுவத்துவ பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிக் சூட்டுக் கொலைகள், 2025 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி கிளப் ஒன்றிற்கு அருகில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் ஆயுதங்களை விநியோகித்தமை, மற்றும் மீகொட பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை உள்ளிட்ட தொடர் கொடூரச் சம்பவங்களை இவரே பின்னணியில் இருந்து இயக்கியுள்ளதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள லலித் கண்ணங்கரவிடம் போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














