வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகின் ஏற்பாட்டில் ‘நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி – 2026’ இன்று (29) கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகிலுள்ள பசுமைப் பூங்கா வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வு ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் திகதிகளில், தினமும் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு பணிப்பாளர் திரு. அருளானந்தம் சீராளன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வை, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பொருட்களை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. சண்முகராஜா சிவஸ்ரீ மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு. சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டு நன்னீர் மீன்பிடி உற்பத்திகள் மற்றும் பல்வேறு உணவு வகைகளைப் பார்வையிடுவதுடன், அவை தொடர்பான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.














