லங்கா சுகர் (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் செவனகல பிரிவின் நிர்வாகம், மறு அறிவித்தல் வரும் வரை தொழிற்சாலையை காலவரையின்றி மூடுவதற்குத் தீர்மானித்துள்ளது.
ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நிறுவனத்திற்கு ஏற்படும் பாரிய நிதி இழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் செவனகல பிரிவைச் சேர்ந்த ஒரு தொகுதி ஊழியர்கள், தமது பணிகளுக்கு புறம்பாக உற்பத்தி நடவடிக்கைகளை முடக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய நிதி இழப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடாத ஏனைய ஊழியர்களுக்குக் கடந்த 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (28) முதல் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உத்தரவிட்டிருந்த போதிலும், தொழிற்சாலை இயங்கத் தொடங்கிய பின்னரும் ஊழியர்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தொழிற்துறை முடக்கம் காரணமாகவே செவனகல தொழிற்சாலையைக் காலவரையின்றி மூடுவதற்கு நிர்வாகம் இறுதி முடிவெடுத்துள்ளது.














