இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஏழு வீரர்கள் மற்றும் இரண்டு பயிற்சியாளர்களை நீக்கிய வாரியத்தின் முடிவை விமர்சிப்பவர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி கடுமையாகச் சாடியுள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 0-2 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் மொஹமட் ரிஸ்வான், சல்மான் அலி ஆகா மற்றும் இமாம்-உல்-ஹக் போன்ற மூத்த வீரர்கள் தாயகம் அனுப்பப்பட்டனர்.
அதேவேளையில் தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமட் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் மாற்றப்பட்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கையை விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள நக்வி, வாரியத்தின் முடிவுகளை நியாயப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் செய்திச் சேவையான ஜியோ நியூஸிடம் பேசிய அவர், “நான் ஒருபோதும் விமர்சனத்தைக் கண்டு அஞ்சியதில்லை; இனியும் அஞ்சமாட்டேன்,” என்று கூறியுள்ளார்.
அத்துடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளை விமர்சிப்பவர்களுக்கு நக்வி இதன்போது பதிலடி கொடுத்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் மீதான பொதுவான அக்கறையை விட, கேள்விகளை எழுப்பியவர்களுக்குத் தன்னுடன் தனிப்பட்ட ரீதியிலான பிரச்சினையே உள்ளது.
வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் இந்த நடவடிக்கையை விமர்சித்திருந்தால் மட்டுமே, அந்த விமர்சனத்தை தான் தீவிரமாகக் கருத்தில் கொண்டிருப்பேன் என்றும் அவர் அந்த பதிலடியில் சுட்டிக்காட்டினார்.
இங்கிலாந்துடனான தொரில் ஒரே நேரத்தில் பலரை நீக்கிய நடவடிக்கையை நியாயப்படுத்திய நக்வி, தான் பிசிபி தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தான் அணியின் செயல்பாடு, குறிப்பாக ‘ஒயிட்-பால்’ (white-ball) கிரிக்கெட்டில், மேம்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
1992 உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ரமீஸ் ராஜா, முன்னாள் முன்னணி துடுப்பாட்ட வீரர் மொஹமட் யூசுப் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்புடைய பலர், பிசிபியின் இந்த அதிரடி முடிவுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தற்போதைய ஐசிசி (ICC) தரவரிசையில் பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது இடத்திலும், டி20 போட்டிகளில் ஆறாவது இடத்திலும் உள்ளது.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் எட்டாவது இடத்திற்குச் சரிந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் மூன்றாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9-ஆம் திகதி தொடங்குகிறது.















