சௌடெல் (Saudel) புயலால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்ததை அடுத்து, கிழக்கு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் வியாழக்கிழமை (03) அன்று அதிகாரிகள் பாடசாலைகளை மூடி, படகுப் போக்குவரத்து சேவைகளை நிறுத்தி வைத்தனர்.
கடந்த சில மாதங்களாகச் சீனாவின் சில பகுதிகளில் தீவிர வானிலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான சூறாவளிகள் பலத்த மழையைக் கொண்டுவந்ததோடு, இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளன.
அண்டை மாநிலமான ஜெஜியாங்கில் இருமுறை தாக்கிய பிறகு, ‘சவுடெல்’ சூறாவளி வியாழக்கிழமை காலை சீனாவின் புஜியான் கடற்கரைப் பகுதியில் மூன்றாவது முறையாக நிலப்பகுதியை அடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஃபுஜோ மற்றும் குவான்ஜோ நகரங்களில் பாடசாலைகள் நேரடிச் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாகவும், ஃபுஜோவில் தீம் பார்க்குகள் உள்ளிட்ட சில சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புஜியான் கடற்கரைப் பகுதியில் மொத்தம் 24 பயணிகள் படகுச் சேவைகள் வியாழக்கிழமை அன்று நிறுத்தப்பட்டதாக அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி (CCTV) செய்தி வெளியிட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இரண்டாம் நிலை பேரிடர்கள் ஏற்படக்கூடும் என்று அந்த மாகாணத்தின் அவசரக்கால மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
கனமழை குறித்த அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அண்டை மாநிலமான ஃபுஜியானில் (Fujian) அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 2,47,700 பேர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டதாக சின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில், ‘மேசக்’ (Maysak) சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக, தென் சீனாவின் குவாங்சி (Guangxi) பிராந்தியத்தில் குறைந்தது 159 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.















