நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் இன்று (14) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த மூடல் நடவடிக்கை ஒரு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் எனவும், எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை இந்த இரு வலயங்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யால தேசிய பூங்காவில் 44 வகையான பாலூட்டிகள், 215 வகையான பறவைகள், 47 வகையான ஊர்வன மற்றும் 21 வகையான மீன் இனங்கள் காணப்படுகின்றன.
பொதுவாக ஆகஸ்ட் முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் யால தேசிய பூங்காவுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
எனினும், இம்முறை நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை நிலைமைகளால் சுற்றுலாப் பருவம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் நீடித்த வறட்சி காரணமாக யால தேசிய பூங்காவிலுள்ள பல நீர்நிலைகள் வற்றியுள்ளன.
இதனால், பூங்காவில் வசிக்கும் விலங்குகளுக்கு குடிநீருக்கான கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், நீடித்த வறட்சியால் தாவரங்கள் மற்றும் புல்வெளிகள் காய்ந்துள்ளதால், வனவிலங்குகளுக்கான உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு நீர் வழங்குவதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மெனிக் கங்கையை அண்மித்த நான்கு இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பம்புகள் மூலம் பெறப்படும் நீர், நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்ட குழாய்கள் ஊடாக தேசிய பூங்காவிலுள்ள நீர்த்தடாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேலும், செயற்கை மற்றும் இயற்கை நீர்த்தடாகங்களை நிரப்புவதற்காக நாளாந்தம் சுமார் 2 இலட்சம் லீற்றர் நீர் நீர்த்தாங்கி வாகனங்கள் மூலம் பூங்காவுக்குள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், வறட்சியான காலநிலைக்கு மத்தியில் உணவு மற்றும் நீரைத் தேடி அலைந்து திரியும் விலங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் நோக்கில், யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2ஆம் வலயங்களை ஒரு மாத காலத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.















