மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘பல்கலைக்கழக சாதனையாளர்களின் பெருமை’ விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் மட்டக்களப்பில் நேற்று (12) நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இத்திட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு ஒரு தடவை ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படுகிறது. கொழும்பில் முதல் கட்டமும், யாழ்ப்பாணத்தில் இரண்டாம் கட்டமும் நடைபெற்ற நிலையில், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்டத்துடன் இவ்வாண்டுக்கான திட்டம் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் நாடளாவிய ரீதியில் சுமார் 400 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், உடல் ரீதியான சவால்களைப் பொருட்படுத்தாது கல்வியில் முன்னேறும் மாணவர்களைப் பாராட்டியதுடன், கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
இலவசக் கல்வி என்பது புத்தகங்களை வழங்குவதுடன் மாத்திரம் மட்டுப்படாது எனக் குறிப்பிட்ட பிரதமர், மாணவர்களுக்குத் தேவையான கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு எனக் கூறினார்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிப் பிரச்சினைக்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் விடுதிகள் அமைக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.












