ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் ஆறு மாத காலப் போருக்கு இதுவரை 38 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது என்றும், இத்தொகை மாதத்திற்கு 3 பில்லியன் டொலர் வீதம் அதிகரிக்கும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சார்பற்ற கணக்கு ஆய்வு அமைப்பு செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தது.
அதேவேளையில், இமோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் வழிகளைத் தேடி வருகிறது.
2026 ஆகஸ்ட் 1 வரையிலான செலவினங்களைக் கணக்கிட்ட காங்கிரஸின் வரவு செலவு அலுவலகத்தின் கணக்கீட்டின்படி, 2027 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் போரினால் பணவீக்கம் 0.5% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் செலவுகள் அமெரிக்காவின் ஆயுத இருப்புகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி எரிசக்தி விலைகளை உயர்த்தியுள்ளன.
இது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிற மோதல்களை எதிர்கொள்ளும் நாட்டின் திறன் குறித்த கவலைகளை எழுப்புவதோடு, ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்தின் மீதும் கூடுதல் சுமையைச் சுமத்துகிறது.
இதற்கான செலவு, 2026 ஜூலை 21 அன்று செனட் விசாரணையில் பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்த 37.5 பில்லியன் டெடாலர் தொகைக்கு நெருக்கமாக இருந்தது.
இவற்றில் பெரும்பாலான செலவுகள் வெடிமருந்து மற்றும் ஆயுதங்களின் விரைவான பயன்பாட்டினால் ஏற்படுவதாக பட்ஜெட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கையிருப்புகளை மீண்டும் நிரப்ப ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்றும் அது மதிப்பிட்டுள்ளது.
போரின்போது அமெரிக்கா தனது நீண்ட தூரத் துல்லிய ஏவுகணைகள் அனைத்தையும் “கிட்டத்தட்ட முழுமையாக” பயன்படுத்திவிட்டதாக ஆகஸ்ட் மாதத்தில் செய்திகள் தகவல் வெளியிட்டிருந்தன.
இதேவேளை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டிடங்களையும், போர் விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட விமானங்களையும் ஈரான் சேதப்படுத்தியதாகவோ அல்லது அழித்ததாகவோ பென்டகனின் தலைமை ஆய்வாளர் இந்த வாரம் அறிக்கை அளித்துள்ளார்.
ஜூன் 19 வரையிலான போருக்கான செலவு 33.4 பில்லியன் டொலர்கள் என்று அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
இதில் ஈரானின் தாக்குதல்களால் அமெரிக்கத் தூதரகக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சுமார் 184 மில்லியன் டொலர் மதிப்பிலான சேதமும் அடங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை (போருக்கு முன்பு உலகின் சுமார் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெற்ற குறுகிய நீர்வழிப்பாதை) மற்றும் அண்டை வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகச் சிக்கல்கள், நுகர்வோர் மற்றும் உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கான விலைகளை வெகுவாக உயர்த்தியுள்ளன.
போருக்கான செலவுகள் அதிகரித்து வருவது, ஏற்கனவே மோசமடைந்து வரும் அமெரிக்காவின் நிதி நிலையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மொத்த பொதுக் கடன் ஆகஸ்ட் மாதத்தில் 40 டிரில்லியன் டொர் அளவைக் கடந்தது.
2001 செப்டம்பர் 11,தாக்குதல்களைத் தொடர்ந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்புகளுடன், ஈரான் போரை ட்ரம்ப் அடிக்கடி ஒப்பிட்டுப் பேசுகிறார்.
ஈராக்கில் எட்டு ஆண்டுகள் நடைபெற்ற அமெரிக்கப் போருக்கு (இதன் உச்சகட்டத்தின்போது 1,00,000-க்கும் மேற்பட்ட தரைப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்) 2 டிரில்லியன் டொலர் செலவானதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை கூறியுள்ளது.
அதேபோல், ஆப்கானிஸ்தானில் இரண்டு தசாப்தங்களாக நீடித்த அமெரிக்க மோதலுக்கு (இதன் தீவிரமான கட்டத்தில் 1,00,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்) 2.3 டிரில்லியன் டொலர் செலவானதாக பிரவுன் பல்கலைக்கழகத்தின் ‘காஸ்ட்ஸ் ஆஃப் வார்’ (Costs of War) திட்டம் தெரிவிக்கிறது.














