இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் பிரித்தானிய பிரதமருமான ரிஷி சுனக் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பானது, புதிய அத்தியாத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலியில் நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது, இளம் தொழில் வல்லுநர்கள் திட்டத்தின் கீழ், 18-30 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு படித்த இந்தியப் பிரஜைகளை இரண்டு வருடங்கள் வரை பிரித்தானியாவில் வசிக்கவும் வேலை செய்யவும் ஆண்டுதோறும் மூவாயிரம் பேருக்க அவ்விதமான வாய்ப்புக்களை வழங்கவும் இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், தலைவர்களிடையேயான சந்திப்பின்போது, இந்தியாவுடனான பிரித்தானியாவின் இருதரப்பு உறவு மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்துடன் வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கான அதன் பரந்த அர்ப்பணிப்பு நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோ-பசுபிக்கின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால செழுமைக்கு ஆற்றல்மிக்க, வேகமாக வளரும் பொருளாதார நாடுகளுடன் இணைவது முக்கியமானது என்பதோடு, அடுத்த தசாப்தத்தில் இந்த பிராந்தியத்தில் என்ன நடக்கிறது என்பதன் மூலம் தான் உலக ஒழுங்கு வரையறுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளர்.
இந்தியாவுடன் நாம் கொண்டுள்ள ஆழமான கலாசார மற்றும் வரலாற்று உறவுகளின் மதிப்பை அறிவேன்.
அந்த வகையில் இந்தோ-பசுபிக்கில் இந்தியாவுடன் பிரித்தானியா என்றும் நண்பனாகவே இருக்குமெனவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, இந்தியாவுடக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
24 பில்லியன் பவுண்ஸ் மதிப்புடைய வர்த்தக உறவை உருவாக்குவதை அடிப்படையாக வைத்தே அப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் வழங்கும் வாய்ப்புகளை பிரித்தானியா பயன்படுத்த அனுமதிக்கும் என்றும், இந்த பேச்சுவார்த்தையில் முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்துவதற்கான சாதகமான நிலைமைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் இந்தியா-பிரித்தானியா இடையே பரந்த அளவிலான விரிவான மூலோபாய கூட்டாண்மை மற்றும் எதிர்கால உறவுகளுக்கான ‘பாதைவரைபடம் 2030’ இன் முன்னேற்றம் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஜி-20 மற்றும் பொதுநலவாய அமைப்புக்கள் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பலதரப்பு தளங்களில் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு மே மாதம் மோடிக்கும் அவரது அப்போதைய பிரித்தானிய பிரதமரான பொரிஸ் ஜோன்சனுக்கும் இடையே நடைபெற்ற இந்தியா-பிரித்தானிய மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது இருதரப்பு உறவு விரிவான மூலோபாய கூட்டாக உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.