அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வழங்கினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயார் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நல்லாட்சி அரசாங்கத்தினால் உத்தியோகப்பூர்வ இல்லம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமாயின் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வழங்குமாறும் தெரிவித்தார்.
அவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ அங்கு சில கணங்கள் தங்கமாட்டார் எனவும், அது தொடர்பில் கருத்து வெளியிடுவதில் அர்த்தமில்லை.
அதேநேரம், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை கையளித்ததன் பின்னர் மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் தற்போதைய அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.