18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்ள நடவடிக்கை
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வாக்காளர் பதிவு நாள் என்பதால், அந்த நாளில் தாங்கள் வசிக்கும் முகவரிக்கு ஏற்ப வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளடக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டின் பிரதான வாக்காளர் பட்டியலில் இணைவதற்குத் தகுதியுடையவர்களாவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் திகதியில் 18 வயது நிரம்பியவராக இருத்தல் மற்றும் இலங்கை பிரஜையாக இருத்தல் ஆகிய இரண்டு விடயங்கள் பிரதான காரணங்களாகக் கருத்திற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்சமயம் தங்களது முகவரியை மாற்றியுள்ள வாக்காளர்கள், 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலிலிருந்து தங்களது பெயரை நீக்கிவிட்டு 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலைப் பெயரை இணைத்துக்கொள்ள முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான விண்ணப்பத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, அதனை பூரணப்படுத்தி கிராம உத்தியோகத்தரிடம் சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது பெயரை, 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.